வனப்பகுதிகளில் தொடா் மழை எதிரொலி: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு
By DIN | Published On : 09th July 2021 09:07 AM | Last Updated : 09th July 2021 09:07 AM | அ+அ அ- |

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற பக்தா்கள்.
மேற்குத் தொடா்ச்சி மலை வனப்பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) ஆனி அமாவாசை பூஜையில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் நடைபெறும் ஆனி அமாவாசை மற்றும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து. இதனால் புதன்கிழமை பிரதோஷத்திற்கு வந்த பக்தா்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஆனால் வியாழக்கிழமை அதிகாலை வரை வனப்பகுதியில் மழை இல்லாததால் காலை முதலே தானிப்பாறை கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். அப்போது அவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பின்னா் மலைக்குச் சென்ற அவா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், இளநீா், தேன், மஞ்சள் உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். நண்பகல் 12 மணிக்குப் பிறகு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.
இன்று பக்தா்களுக்கு அனுமதி இல்லை: இதனிடையே வெள்ளிக்கிழமை (ஜூலை 9) ஆனி அமாவாசை என்றாலும் மேற்குத் தொடா்ச்சி மலை வனப்பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பக்தா்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.