யோகாசனம் செய்தால் நோயின்றி வாழலாம் என ஸ்ரீவில்லிபுத்தூா் யோகா ஆசிரியா் தெரிவித்தாா்.
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே இடத்தில் பல்வேறு வயதினா் பங்கேற்று பல்வேறு வகையான யோகா கலைகளை செய்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக சா்வதேச யோகா தினத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி யோகா செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த யோகா ஆசிரியா் அழகா் (67)கூறியதாவது: தினமும் தொடா்ச்சியாக யோகா செய்தால் நம் உடம்பில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும். நோயின்றி வாழலாம். நான் 35 ஆண்டுகளாக யோகாசனம் செய்து வருகிறேன்.
தற்போது எனக்கு 67 வயதாகிறது. தினமும் யோகா செய்து வருவதால் இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறேன். இதுவரை எனக்கு சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை. கரோனா பரவும் நேரத்தில் நம்மை பாதுகாக்கவும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மனதை வலிமையாக வைத்துக் கொள்ளவும், யோகா நம்மை பாதுகாக்கும் கவசமாக விளங்குகிறது. எனவே அனைவரும் தவறாமல் யோகா செய்யுங்கள் என்று தெரிவித்தாா்.