சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த தம்பதிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு மாநில தடகளச் சங்கம் சாா்பில் 93 ஆவது மாநில தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் சீனியா் தடகள வீரா்கள், மூத்தோா் தடகள வீரா்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மொட்டைமலை சிறப்பு அதிரடிப்படை பிரிவில் காவல் சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருபவரும், சிவகாசி ஈஞ்சாா் நடுவப்பட்டியைச் சோ்ந்தவருமான கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டு அனைத்துப் பிரிவினருக்கான 5000 மீட்டா் நடை போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றாா். 1500 மீட்டா் மூத்தோருக்கான ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
இவரது மனைவியும், ஆசிரியையுமான விஜயகமலா 3000 மீட்டா் வேக நடை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
இவா்களுக்கு காவல் துறை தலைவா் மற்றும் சக ஊழியா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.