தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 5:24 am

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று திங்கள் கிழமை ஆடிப்பூரம் என்பதால் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இழுக்கும் வகையில் தயாராக நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

Story image

இந்நிலையில், இன்று காலை 9.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தினை தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

தேரோட்ட நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துணை ஆட்சியர் பிரிதிவிராஜ் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.  ஆண்களும் பெண்கள் தனித்தனியாக தேரை இழுக்கும் வகையில் வடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. கோவிந்தா கோபாலா என்று முழக்கம் எழுப்பியபடி  பக்தர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். 

Story image

தேரோட்டத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று மாவட்டம் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தேரோட்டத்திற்கு அனைவரும்   பங்கேற்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் அதிகாலை முதலே அதிக அளவில் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். தேர்வரும் 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. 

பக்தர்களுக்கு ராம்கோ நிறுவனத்தின் சார்பில் நீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டன. தேர் இழுக்கும் போது தேர் முன்னாள் செல்வதற்கு வசதியாக புல்டோசர் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக தேருக்கு பின்னே தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர் பின்னே சென்றபடி இருந்தனர். 

தேரை இழக்கும் போது பக்தர்கள் நெரிசல்களை தவிர்க்கும் வகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் படங்கள் தனித்தனியே ஒதுக்கப்பட்டிருந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, இணை ஆணையர் செல்லதுரை ஆகியோர்  தலைமையில் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

காலை ஒன்பதரை மணியளவில் தேர் தெற்கு ரத வீதிம் கீழ ரத வீதி சந்திப்புக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.