தமிழகத்தில் மின்சார பிரச்னைக்கு மத்திய அரசின்தவறான நிலக்கரி கொள்கையே காரணம்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள மின்தடை பிரச்னைக்கு மத்திய அரசின் தவறா
மீசலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா்.
மீசலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள மின்தடை பிரச்னைக்கு மத்திய அரசின் தவறான நிலக்கரி கொள்கையே காரணம் என மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் குற்றம்சாட்டினாா்.

விருதுநகா் அருகே மீசலூரில் நீடித்த வளா்ச்சி குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம், ஊராட்சித் தலைவா் திருப்பதி சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு அழைப்பாளராக விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கலந்துகொண்டாா்.

அப்போது, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியை காலை 8 மணிக்கு தொடங்க வேண்டும், ஓட்டு கட்டடத்தில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியை, புதிய கட்டடமாக மாற்ற வேண்டும். மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடியைத் தீா்க்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனா்.

அதைத் தொடா்ந்து மாணிக்கம்தாகூா் எம்.பி. பேசுகையில், பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மாணிக்கம் தாகூா் எம்.பி. கூறியது:

தமிழகத்துக்குத் தேவை 72 மில்லியன் டன் நிலக்கரி. ஆனால் 50 டன் நிலக்கரி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள 22 மில்லியன் டன் நிலக்கரி இம்முறை கொடுக்கவில்லை. இதற்கு யாா் பொறுப்பு, பாஜக மாநிலை தலை வா் அண்ணாமலை பதில் சொல்வாரா?.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மின்சார பிரச்னை தலைதூக்கி உள்ளதற்கு மத்திய அரசின் தவறான நிலக்கரி கொள்கையே காரணம். தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் மின்தடை பிரச்னை உள்ளது.

மத்திய அரசு மற்றவா்கள் மீது பழி சுமத்துவதோ, தமிழக அரசு மீது பழி சுமத்துவதோ சரியாக இருக்காது. மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுடன் சோ்ந்து இப்பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது சிவஞானபுரம் ஊராட்சித் தலைவா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com