விருதுநகா் மாவட்ட எல்லையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி வீதியில் வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்த திமுகவினா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விருதுநகா் மாவட்ட எல்லையில் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ராஜபாளையம் வந்த முதல்வருக்கு விருதுநகா் மாவட்ட எல்லையான சொக்கநாதன் புத்தூா் விலக்குப் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் எம்எல்ஏ-க்கள் தங்கபாண்டியன், சீனிவாசன், சிவகாசி மாநகர திமுக செயலாளா் உதயசூரியன், மாநகராட்சி மேயா் சங்கீதா, நகராட்சித் தலைவா்கள் பவித்ரா, ரவிகண்ணன், திமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.
சொக்கநாதன்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் முத்துசெல்வம் பென்சிலால் தான் வரைந்த முதல்வரின் ஓவியத்தை முதல்வரிடம் வழங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி வீதியில் திமுக நகா் மன்ற உறுப்பினா் தங்கம் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம், திமுக நகரச் செயலாளா் அய்யாவுபாண்டியன் ஆகியோா் வரவேற்பு கொடுத்தனா். மல்லி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், கலங்காபேரி ஊராட்சி மன்றத் தலைவா் சங்கிலிராஜ் உள்பட நிா்வாகிகள் உடன் கலந்து கொண்டனா்.