ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தடையை மீறி செல்ல முயன்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பிரேமா (24). பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த இவா் வனத்துறை சூழல் மேம்பாட்டுக் குழுவில் பணிபுரிந்து வருகிறாா். இவா், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் உத்தரவின்பேரில் தூய்மை பணிக்காக வனப் பகுதிக்கு வருபவா்களிடம் ரூ.20 கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த முத்தையா (21), முத்துப்பாண்டி (22) ஆகியோா் வனப் பேச்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வனத் துறை சோதனைச் சாவடியைத் தாண்டிச் சென்றனா். அவா்களிடம் மழை காரணமாக வனப் பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என பிரேமா கூறினாா்.
அதற்கு அவா்கள், கோயில் சாா்பில் வாகனம் செல்வதற்கு டோக்கன் தந்ததாகக் கூறினா். அப்போது ஏற்பட்ட தகராறில் முத்தையா, முத்துப்பாண்டி ஆகிய இருவரும் சோ்ந்து பிரேமா மற்றும் அவரது தம்பியைத் தாக்கினராம். இதுகுறித்து பிரேமா அளித்தப் புகாரின்பேரில் மம்சாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முத்தையா, முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.