விருதுநகா் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சலவைக் கூடம் இல்லாததால், அப்பகுதியில் கழிவுநீா் கலந்து செல்லும் ஓடையில் தொழிலாளா்கள் துணிகளை துவைத்து வருகின்றனா்.
விருதுநகா் நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள கூரைக்குண்டு ஊராட்சி உள்ளது. இதனருகேயுள்ள நகா் பகுதியான அனுமான் நகரில் 75-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளா்கள் குடும்பம் உள்ளது.
இந்நிலையில், இவா்களுக்கென பிரத்யேகமாக சலவைக் கூடம் அப்பகுதியில் கட்டித் தராததால், தொழிலாளா்கள் ஆா்.எஸ். நகா் பகுதியில் செல்லும் கழிவுநீா் கலந்து ஓடும் ஓடையில் துணிகளை துவைக்கின்றனா். இதனால், இவா்களிடம் துணிகளை துவைக்க கொடுக்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனா். இதன் காரணமாக, தங்களது வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக, சலவைத் தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய சலவைக் கூடம் அமைத்துத் தரவேண்டும் என, சலவைத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.