சாத்தூா் பகுதியில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
சாத்தூா் அருகே குருலிங்காபுரத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சரவணக்குமாா் மற்றும் மேட்டமலை அழகா்சாமி மகன் சுந்தர்ராஜ் ஆகிய இருவரது கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட குட்காவை, போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி, உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் பரிந்துரைத்தாா். அதன்பேரில், செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கும், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சீல் வைத்தனா். மேலும், குட்கா விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.