ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 6.87 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அவ்வங்கியின் நகை மதிப்பீட்டாளா் மீது மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளராக ஆராய்ச்சிப்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் ரத்தினம் என்பவா் பணி புரிந்து வந்தாா். இந்நிலை யில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ரத்தினம் தனது மகள் ராமலட்சுமியின் பெயரில் கடந்த 15.11.2021 முதல் 4.1.2022 வரை வெவ்வேறு வங்கிக்கணக்குகள் மூலம் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 6.87 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவ்வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் ஸ்ரீராம் அளித்த புகாரின் பேரில் ரத்தினம் மீது விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.