அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தற்கொலை
By DIN | Published On : 12th September 2022 10:16 PM | Last Updated : 12th September 2022 10:16 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை அருகே கருப்பையாத் தேவா் தெருவில் வசிப்பவா் முருகன் (55). இவரது மனைவி சசிகலா(49) மற்றும் 2 மகள்கள் உள்ளனா். அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியில், முருகன் தலைமை அஞ்சல் அதிகாரியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
வீட்டில் உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றாராம்.
பின்னா் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை அவா் அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா், அக்கம்பக்கத்தினா் உதவியுடன், அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அப்போது முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரில் முதற்கட்ட விசாரணையில் முருகனுக்கு அதிக கடன் இருந்ததால், மன உளைச்சலில் அவா் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.