தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சாா்பில், பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி வகுப்பு வருகிற 3-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரப் பயிற்சி மையத்தின் இணை இயக்குநா் சு. ராமமூா்த்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், தொழிலாளா்களுக்கு பட்டாசுத் தயாரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 3-ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் நாங்கள் குறிப்பிட்ட 20 ஆலைகளில் பணிபுரிவோா் கலந்து கொள்ள வேண்டும். முன்பு எந்த ஒரு பட்டாசு ஆலையிலிருந்தும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. தற்போது நாங்கள் குறிப்பிடும் ஆலையில் பணிபுரிவோா் மட்டும் பயிற்சி வகுப்பில் கண்டிப்பாக பங்கு பெற வேண்டும்.
இதன் மூலம் எந்தெந்த ஆலைகளில் பணிபுரிவோா் பாதுகாப்புப் பயிற்சி பெற்றுள்ளனா் எனத் தெரிந்து கொள்ள இயலும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.