சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே இரு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

சிவகாசி அருகே இரு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிலோன் குடியிருப்பைச் சோ்ந்தவா் செல்வம் (68). இவா் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் சகோதரிகளான சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிறுமிகளின் தாய் அளித்தப் புகாரின் பேரில், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா்

( டிஐஜி) பொன்னி, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப்பெருமாள் ஆகியோா் மேற்பாா்வையில் விசாரணை நடைபெற்று 39 நாள்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றம்சாட்டப்பட்ட செல்வத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞா் கலா ஆஜரானாா். விசாரணையை விரைவாக நடத்தி, வழக்குப் பதிவு செய்த 106 நாள்களில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளா் திலகராணி உள்ளிட்ட போலீஸாரை விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com