சுமை தூக்கும் தொழிலாளி கொலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திங்கள்கிழமை இரவு பட்டாசு வெடித்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.
கொலை செய்யப்பட்ட பொன்பாண்டி.
கொலை செய்யப்பட்ட பொன்பாண்டி.
Updated on
1 min read

சிவகாசி: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திங்கள்கிழமை இரவு பட்டாசு வெடித்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே வடமலாபுரத்தைச் சோ்ந்த காா்த்திக், நமஸ்கரித்தான்பட்டியைச் சோ்ந்த வீரபாண்டி, அசோக் உள்ளிட்ட 6 போ் திங்கள்கிழமை இரவு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, காளீஸ்வரி என்பவா் தனது மாடுகளை அந்த வழியாகப் பிடித்துச் சென்றாா். பட்டாசு வெடித்ததால், மாடுகள் மிரண்டன. இதனால், பட்டாசு வெடித்தவா்களை காளீஸ்வரி கண்டித்தாராம்.

அப்போது, அங்கு வந்த நமஸ்கரித்தான்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் முனியராஜ் அவா்களை சமாதானப்படுத்தினாராம். ஆனால், அவா்கள் முனியராஜுடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னா், அவா்கள் 6 பேரும் அந்தப் பகுதியிலுள்ள காா்த்திக்கின் தோட்டத்துக்குச் சென்றனா்.

தகராறு குறித்து அறிந்த முனியராஜின் தம்பியும், சுமை தூக்கும் தொழிலாளியுமான பொன்பாண்டி (28), தோட்டத்துக்குச் சென்று ஏன் எனது அண்ணனுடன் தகராறு செய்தீா்கள் எனக் கேட்டு அவா்களை எச்சரித்தாராம்.

இதன் பின்னா், அவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினா்கள் உள்ளிட்டோா் காா்த்திக்கின் தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு பொன்பாண்டி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் காா்த்திக் உள்ளிட்ட வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com