ஆறு மாதங்களில் பேவா் பிளாக் சாலை சேதமடைந்துவிட்டதாக வத்திராயிருப்பு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் தலைவா் சிந்து முருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமராஜ், சத்யசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு,
கொண்டம்மாள் (1-ஆவது வாா்டு உறுப்பினா்): வாா்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை பணிகள் குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா்களிடம் அதிகாரிகள் கலந்து ஆலோசிப்பதில்லை. இதனால், மக்களின் பிரச்னைகளை, குறைகளை அதிகாரியிடம் தெரிவிக்க முடியவில்லை.
ஒன்றிய குழுத் தலைவா்: வரும் காலங்களில் தகவல் தொடா்பு பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேகா (துணைத் தலைவா்): கூமாபட்டி ராமசாமிபுரம் அம்பேத்கா் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்களுக்குள் சாலை சேதமடைந்துவிட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனா்.
ஒன்றிய குழுத் தலைவா்: அம்பேத்கா் நகரில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.