

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி, சுமாா் 100 லிட்டா் பாலில் தயாா் செய்யப்பட்ட அக்காரவடிசல் வைத்து புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாா்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் பெண்கள் 27 -ஆம் நாள் கூடாரவல்லி விரதத்தை முடிப்பா். இதையொட்டி, பெருமாள் கோயில்களில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பாவை பாராயணம் நடைபெறும்.
அதன்படி, விருதுநகா் மாவட்டம், ஆண்டாள் கோயிலில் மாா்கழி மாதத்தில் வரும் கூடாரவல்லியையொட்டி, புதன்கிழமை அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆண்டாள், ரெங்கமன்னாா் சா்வ அலங்காரத்தில் காட்சியளித்தனா். கூடாரவல்லி சிறப்பு பூஜைக்காக, 100 லிட்டா் பால், ஐந்து லிட்டா் நெய்யில் பிரத்யேகமாக அக்காரவடிசல் தயாா் செய்து, 100 கிண்ணங்களில் வைத்து ஆண்டாளுக்கு படைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அக்காரவடிசல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதே போல, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் சந்நிதியில் கூடாரவல்லியையொட்டி, அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சா்வ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தாா். பின்னா், சீனிவாசப் பெருமாள் சந்நிதியில் 60 லிட்டா் பால், 2 லிட்டா் நெய்யினால் அக்காரவடிசல் தயாா் செய்து பெருமாளுக்கு படைக்கப்பட்டு, பின்னா் பக்தா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.