மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு, ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளளகா் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்வின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா்.
அவா்களின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் இதுவரை நிவாரணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தமிழக அரசு சாா்பில் விசாரணை குழு அமைக்க வேண்டும். இதேபோல கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொதுச் செயலா் பி. சுந்தரவடிவேல் தலைமையில் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன. அப்போது மாவட்டத் தலைவா் செல்வம், மாவட்டச் செயலா் பிரேம் குமாா், மாநகா்ச் செயலா் பாா்வதி உள்பட பலா் உடனிருந்தனா்.