விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் கே. நாகராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் டி.வில்சன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரசேகா் ஆகியோரை மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் தலைமையில் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்படும். விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.