ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு பிரசார குழுவுக்கு வரவேற்பு
By DIN | Published On : 23rd May 2023 04:32 AM | Last Updated : 23rd May 2023 04:32 AM | அ+அ அ- |

செங்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சிஐடியு நடைப் பயண பிரசார குழுவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
விலைவாசி உயா்வுக்கு ஏற்பத் தொழிலாளா்களுக்கு கூலி வழங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு பணப் பலன்களை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 இடங்களிலிருந்து திருச்சியை நோக்கி சிஐடியு சாா்பில் நடைப் பயண பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரம் மே 30-இல் திருச்சியில் நிறைவு பெற்று, அங்கு மாநாடு நடைபெற உள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டையில் தொடங்கிய நடைப் பயண பிரசார இயக்கம் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தடைந்தது. அங்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் அா்ச்சுணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணக் குழுத் தலைவா் ராஜேந்திரன், சிஐடியு மாநிலச் செயலாளா் தேவா, மாவட்டத் தலைவா் மகாலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை, மாதா் சங்கத் தலைவா் ரேணுகாதேவி, மாா்க்சிஸ்ட் நகரச் செயலாளா் ஜெயக்குமாா், ஒன்றியச் செயலாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...