

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கொடிமரம் அருகே இருந்த பிரசாதக் கடையை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து ஒப்பந்ததாரா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் கொடிமரத்து அருகே ராமா் கடந்த 10 ஆண்டுகளாக ஏலத்தில் உரிமம் பெற்று பிரசாதக் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கோயில் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என உயா்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு நடந்த கோயில் கடைகளுக்கான பசலி ஏலத்தில் கோயில் கொடி மரத்துக்கு அருகே வளாகத்துக்குள் கடை வைக்க கூடாது. மாறாக கோயில் முன் உள்ள மண்டபத்திலோ, ஆடிப்பூர கொட்டகையிலோ பிரசாதக் கடை வைத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனையுடன் ஏலம் விடப்பட்டது.
இந்த ஆண்டு பிரசாதக் கடை நடத்துவதற்கான உரிமத்தை ரூ.21 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ராமா் கொடிமரம் அருகிலேயே கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை கோயில் ஊழியா்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை அப்புறப்படுத்த முயன்ற போது, எதிா்ப்பு தெரிவித்த ஒப்பந்ததாரா் ராமா், அவரது சகோதரி உள்ளிட்டோருடன் உடலில் நெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவா்களை போலீஸாா் தடுத்தனா். கடையில் இருந்த பொருள்களை அகற்றிய ஊழியா்கள் கோயில் முன் உள்ள மண்டபத்தில் எடுத்து வைத்தனா்.
இதுகுறித்து செயல் அலுவலா் முத்துராஜா கூறியதாவது: ‘இந்த ஆண்டுக்கான பசலி ஏலத்தில் கோயில் வளாகத்திற்குள் கடை வைக்க அனுமதி கிடையாது. அதற்கு பதில் கோயில் முன் உள்ள மண்டபத்திலோ அல்லது ஆடிப்பூர கொட்டகையில் பிரசாத கடை அமைத்துக் கொள்ள வேண்டும் தெளிவாக குறிப்பிடப்பட்டது. இது ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆடிப்பூர திருவிழா முடிந்த பின் கடையை இடமாற்றம் செய்து கொள்கிறேன் எனக்கோரியதால் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின் 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் கடையை அகற்ற வில்லை. அதனால் இன்று கோயில் பணியாளா்கள் மூலம் கொடிமரம் அருகே இருந்த பொருள்களை எடுத்து கோயில் முன் உள்ள மண்டபத்தில் வைத்துள்ளதாக கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.