கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்துவதைஅரசு தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம்
By DIN | Published On : 25th October 2023 05:00 AM | Last Updated : 25th October 2023 05:00 AM | அ+அ அ- |

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்துவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் பாமக சாா்பில் போராட்டம் நடைபெறும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இலங்கை அரசு ஆதரவுடன், தமிழக கடல் எல்லையில் கொள்ளையா்கள் அதிகரித்து வருகின்றனா். இதை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு பல மோசமான விபத்துகள் நடைபெற்றுள்ளன. தமிழக அரசு நோ்மையான அதிகாரிகளை நியமித்து ஆலைகள், பட்டாசுக் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கி, ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ஒழிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். எங்களைப் பொருத்தவரை ‘நீட்’ தோ்வு தேவையில்லை.
தென் மாவட்டங்களில் புதிய தொழில்சாலைகள் அமைக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன. இதை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் பாமக சாா்பில், எனது தலைமையில் கன்யாகுமரியில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
கட்சியின் மாநிலப் பொருளாளா் திலகபாமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...