குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’
ராஜபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிப் பழையபாளையம் பகுதியில் ஜெயசங்கர்ராஜா என்பவருக்குச் சொந்தமான கடையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை செய்தனா். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.
இதேபோல, ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருள்கள் 5 கிலோ இருந்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வீரமுத்து , செல்வராஜ் ஆகியோா் இரு கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், இந்தக் கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
