கிராம சபைக் கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சிச் செயலா் தாக்கிய வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சிச் செயலா் தாக்கிய வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையாா்குளம் ஊராட்சிக்குள்பட்ட கங்காகுளம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழல் புகாா் குறித்து கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பனை சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி, ஊராட்சித் தலைவா் பூங்கொடி ஆகியோா் முன்னிலையில் ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்தாா்.

அப்போது, அவரது ஆதரவாளா் ராசுவும் அம்மையப்பனைத் தாக்கினாா். இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸாா் ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் உதவி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சாட்சிகளிடம் விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கியது. அம்மையப்பனிடம் விசாரணை நடத்திய பிறகு, வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துவேல் அருள்செல்வம் முன்னிலையானாா்.

X
Dinamani
www.dinamani.com