தளர்வுகள் இல்லாத பொதுமுடக்ககத்தால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கமின்றி நாகை நகர வீதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடளவில் மார்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்ததாலும் பொதுமக்கள் நன்மை கருதியும் ஜூன்மாதம் பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. மாவட்டங்களுக்குள் பேருந்துசேவைகளும் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக ஜூலை 31-ஆம்தேதி வரை தமிழக அரசு சில கட்டுபாடுகளை அறிவித்ததுடன், பேருந்து போக்குவரத்து சேவையையும் ஜூலை15-ஆம் தேதி வரை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. மேலும் ஜூலை மாதத்தில் 5,12,19,26 ஆகிய தேதிகளில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி இந்த மாதத்தின் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 12-ஆம் தேதி தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் நாகை மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டன. இந்த தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கத்தால், நாகை மாவட்டப் த்தின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்துகளின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மருந்தகங்கள, பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனஙகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் நிலையங்கள் செயல்படவில்லை.
வாடகை கார்கள், ஆட்டோக்களின் இயக்கமும் தடை செய்யப்பட்டிருந்தன. இதேபோல் நாகை மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கத்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாகை கடைவீதிகள், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.