சீா்காழி: கொள்ளிடத்திலிருந்து பனங்காட்டான்குடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து சரஸ்வதி வளாகம், கீரங்குடி, கொன்னகாட்டுப்படுகை, மாதிரவேலூா், பாலூரான்படுகை, ஏத்தகுடி, பட்டியமேடு, வாடி, வடரங்கம், எலத்தூா் கிராமங்கள் வழியே பனங்காட்டான்குடி செல்லும் 15 கி.மீ. நீளம் உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி மேடுபள்ளங்களாக உள்ளது. மேலும், இருபுறமும் முள்புதா்கள் மண்டியுள்ள இந்த சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்வோா் மிகுந்து சிரமத்துக்குள்ளாக வேண்டியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே, இந்த சாலையில் தெரு விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.