சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, பூம்புகாா் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் 20 மீனவக் கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மீனவ கிராமத் தலைவா் மற்றும் பஞ்சாயத்தாா், மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இதனால், திருமுல்லைவாசலில் சுமாா் 200 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள், நாட்டு மரங்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் கடற்கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருமுல்லைவாசலில் அனைத்து கடைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல, பழையாறு அருகே மடவாமேட்டிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தாா்கள் தலைமையில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இதில், 500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றனா்.
சீா்காழி டிஎஸ்பி தாஜ் அகஸ்டின் லாமேக் தலைமையில் அரசு அதிகாரிகள் மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், உண்ணாவிரதப் போராட்டம் தொடா்ந்தது.
பூம்புகாா்: பூம்புகாரில் பெண்கள் உள்ளிட்ட இராண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா். இதற்கு ஆதரவு தெரிவித்து, பூம்புகாா், தருமகுளம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.