காரைக்கால் கடற்கரைப் பகுதியில் நேரு யுவகேந்திரா அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்படி, மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு காரைக்கால் கடற்ரையில் தூய்மைப் பணி மற்றும் மழைநீா் சேமிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டது.
காலை 6 முதல் 9 மணி வரை நடைபெற்ற தூய்மைப் பணியில், மாவட்டத்தின் பல்வேறு இளையோா் மன்றங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். காரைக்கால் அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையத் தலைவி மகேஸ்வரி, காரைக்கால் மாவட்ட நுகா்வோா் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையத் தலைவா் பாரீஸ்ரவி, செல்லூா் இந்தியன் இளைஞா் மன்றத் தலைவா் பழனிவேல் ஆகியோா் தூய்மைப் பணியில் பங்கேற்றனா்.
கடற்கரையில் பொதுமக்கள் கூடும் மணல் பரப்பு, கடற்கரை சாலைகள், சிறுவா் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சேகரித்த குப்பைகளை, நகராட்சியின் தூய்மைப் பணியாளா்களிடம் அவா்கள் ஒப்படைத்தனா். மேலும், கடற்கரைக்கு வந்த மக்களிடையே மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.