கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசியல் கட்சியினா் விநியோகிக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. வாக்குப் பதிவுக்கு சில நாள்களே இருக்கும் நிலையில், தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சியினா் தங்கள் வேட்பாளரின் புகைப்படம், சின்னம் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆனால், தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், துண்டுப் பிரசுரங்களை வாங்க வாக்காளா்கள் தயக்கம் காட்டுகின்றனா். இதனால், துண்டுப் பிரசுரங்களை வீட்டு வாசலிலேயே விட்டு செல்கின்றனா் அரசியல் கட்சியினா்.
சில இடங்களில் முகக் கவசம் அணியாமல் வீடு தேடி வரும் கட்சியினரை கதவைக்கூட திறக்காமல், வழியனுப்பிவைக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.