சுதந்திர தின விழாவையொட்டி காரைக்கால் நகரப் பகுதி மற்றும் கடல் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தின விழாவையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் போலீஸார் தீவிர கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்துக்கு வந்து சென்ற பேருந்துகளில் நீண்ட நேரம் சோதனை மேற்கொண்டனர். மேலும், நகரப் பகுதியில் பயணிக்கும் உள்ளூர், வெளியூர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். கடலோரக் காவல்நிலைய போலீஸார், ரோந்துப் படகில் கடலுக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். கடல் பகுதியில் காரைக்கால் எல்லைக்குள்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். துறைமுகத்துக்கு வந்த படகிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடல் பகுதி மற்றும் கடலோர குடியிருப்புப் பகுதியில் அறிமுகமில்லாதோர் நடமாட்டம் இருக்கும்பட்சத்தில், காவல்துறையிடம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். காரைக்கால் மாவட்டத்தில், தமிழகப் பகுதியையொட்டிய வாஞ்சூர், அம்பகரத்தூர், நெடுங்காடு, பூவம் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கை சுதந்திர தினம் வரை தொடரும் என போலீஸார் தெரிவித்தனர்.