காரைக்கால் ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயிலில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோயிலில், ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ கால பைரவர் சன்னிதி, ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சன்னிதி உள்ளன.
தேய்பிறை அஷ்டமி, கால பைரவருக்கு சிறப்புக்குரியதாகும். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அஷ்டமி பூஜையையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தனர்.
இதுபோன்று அம்பகரத்தூர் ஸ்ரீ பார்வதீசுவரர் கோயில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் உலக நன்மைக்காக பைரவருக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.