பல்வேறு துறையில் சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் மாங்கனித் திருவிழா கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வீராங்கனை சாவித்திரிபாய் மகளிர் வளர்ச்சி அமைப்பு சார்பில், விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் வாசுகி ஜெயராமன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் வாசுகி இளவரசுக்கு ஆய்வுத் திலகம் விருது, மரியார்த்தி லூயிஸுக்கு சேவைத் திலகம் விருது, ராமகலியமூர்த்திக்கு இலக்கியத் திலகம் விருது, அரங்கநாயகி ராவுக்கு கவிஞர் திலகம் விருது, காரைக்கால் பேராசிரியர் மு. சாயபுமரைக்காயருக்கு நூலகத் திலகம் விருது, பேராசிரியை நசீமாபானுக்கு நங்கையர் திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருதுகளை கலைமாமணி காரை சுப்பையா, கி. கேசவசாமி, பாரீஸ் ரவி, செரந்தியா சண்முகநாதன், கைலாசநாதர் கோயில் தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பேராசிரியர் அகரமுதல்வன் தலைமையில் உலக பொதுமறை பெரிதும் வலியுறுத்துவது தனிமனித முன்னேற்றம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.