காரைக்கால் அருகே வட்டித் தொகை தராத ஆத்திரத்தில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அம்பகரத்தூர் அருகேயுள்ள கோயில் கந்தன்குடியைச் சேர்ந்தவர் அன்பழகன் (64). இவர், அம்பகரத்தூர் பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் கலைவாணன் என்பவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக பணத்துக்கான வட்டியை அன்பழகனால் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அம்பகரத்தூர் பகுதிக்கு திங்கள்கிழமை வந்த அன்பழகனை கலைவாணன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து அம்பகரத்தூர் புறக்காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து கலைவாணனை தேடி வருகின்றனர்.