காரைக்கால் நகரப் பகுதியில் சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியருக்கு பள்ளியின் பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் அரசு உதவிபெறும் பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக, சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிப்புப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படவில்லை.
மாணவர்கள், பெற்றோர் மற்றும் அனைத்துத் தரப்பினரும் சாலைகள் சீர்கேட்டால் பெரும் அவதிப்படுகின்றனர். நகரப் பகுதியில் காமராஜர் சாலை, புளியங்கொட்டை சாலை, எம்.எம்.ஜி.நகர் சாலை, மார்க்கெட் சாலை, மாதாகோயில் சாலை உள்ளிட்டவை படுமோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. இருசக்கர வாகனங்கள் பயணிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. சாலை சீர்கேட்டால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படுகிறது. எனவே, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். நகரப் பகுதியில் உள்ள சீர்கேடான சாலைகளை போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சாலைகள் மோசமடைந்துள்ளதால், நகரப் பகுதிக்குள் விபத்துகளும் ஏற்படுவதை கவனத்தில்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.