நெடுங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நிதி மேலாண்மை குறித்த பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செபி அமைப்பின் சார்பில் மாணவர்கள் நிதி மேலாண்மை குறித்து அறிந்துகொள்ளும் வகையிலான பயிலரங்கம் நடத்தப்பட்டது. புது தில்லியில் இயங்கும் இந்த அமைப்பு காரைக்கால் மாவட்டத்தில் 2 பள்ளிகளைத் தேர்வு செய்துள்ளதில், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை இந்தப் பயிற்சியை அளித்தது.
பள்ளி துணை முதல்வர் எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். செபி அமைப்பின் நிதி கல்வி பயிற்றுநர் எஸ்.பி.ராஜேந்திரன் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார்.
நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செபி, நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், நிறுவனங்களில் நிதியை டெபாசிட் செய்து ஏமாற்றமடைந்தோருக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறது.
இந்த அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு அவர் விளக்கிக் கூறினார். மாணவர்கள் அனைவரும் நிதி சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதோடு, நிதி நிறுவனங்களின் போக்கை எவ்வாறு அறிவது, நிதி நிறுவனங்களால் ஏமாற்றம் அடைந்துவிட்டால், எவ்வாறு செபி அமைப்பினை தொடர்புகொண்டு தெரிவித்து பயன்பெறுவது என்பது குறித்தும், ஏமாற்றம் அடைந்தோர் புகார் பதிவு செய்தால், நிறுவனங்களைத் தொடர்புகொண்டு உரிய நிதியை ஒப்படைக்கச் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு செபி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கும் கையேடுகளை அவர் வழங்கினார். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு ராஜேந்திரன் விளக்கம் அளித்தார். மாவட்ட சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வடிவாம்பாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிலரங்கில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.