மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்திற்கு மரியாதையும், பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாயிலில் அதிமுக கொடியேற்றப்பட்டது. இதுபோல மாவட்டத்தில் சுமார் 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் படம் வைத்து மரியாதையும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கருப்பையா, மாவட்ட பொருளாளர் எச்.எம்.ஏ.காதர், இணை செயலர்கள் ஆரிபு, கே.ஜீவானந்தம் மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டி.டிவி.தினகரன் ஆதரவாளர்களும் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மரியாதை செய்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் தனியாக ஈடுபட்டனர்.