காரைக்கால் மண்டல விளையாட்டு அபிவிருத்தி மையத்தின் சார்பில், விநாயகா மிஷன்ஸ் நிறுவனர் ஏ.சண்முகசுந்தரம் 3-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், விளையாட்டு அபிவிருத்தி மையத்தின் தலைவருமான ஏ.வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி கலந்துகொண்டு, மாணவ- மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிப் பேசியது :
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் அதிகம் ஆர்வம் செலுத்தவேண்டும். இவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது, இதுபோன்ற மையத்தினர், உடற்பயிற்சி அளிப்போர், உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
மாணவர்களிடையே பல்வேறு விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்துவதோடு, அவர்களிடையே இதுபோன்ற போட்டிகளை நடத்தப்படவேண்டியதும் முக்கியமானதாகும். விளையாட்டு சிந்தனையுள்ள மாணவர்கள், இளைஞர்களின் நோக்கம் சிறப்பாக இருக்கும். அவர்கள் தவறான பாதையை தேர்வு செய்யமாட்டார்கள். படிப்பில் உற்சாகம் ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால், விளையாட்டு அமைப்பினர் மாணவர்களை வெகுவாக ஊக்குவிக்கவேண்டும் என்றார் அமைச்சர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் எச்.செய்யது மரூஃப் சாஹிப் பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆர்.ஜான்சன்ராஜ் ரமேஷ் வரவேற்றார். மைய அமைப்பு செயலர் டி.செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.சங்கர், வி.அலெக்ஸ், ஜெயபால், அபி, மனோஜ், சீனிவாசன், அம்புரோஸ், வாசு ஆகியோர் செய்திருந்தனர்.