அக்.3 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
ஊதிய நிலுவை வழங்காததைக் கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் வரும் அக்.3 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
காரைக்கால் கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், போராட்டக் குழுத் தலைவர் ரஹ்மத் பாட்ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலர் மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செயலர் மனோகர் கூறியது : கூட்டுறவு நியாய விலைக் கடைகளாக காரைக்காலில் 70 கடைகள் உள்ளன. இதில் நிரந்தர ஊழியர்கள் 60 பேரும், தினக்கூலி ஊழியர்களாக 61 பேரும் பணியாற்றிவருகின்றனர். மக்களுக்கு இலவச அரிசி வழங்கல் ரேஷன் கடையின் பிரதானப் பணியாக இருக்கிறது.
ஊழியர்களுக்கு கடந்த 15 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இதுதொடர்பாக அரசுத் தரப்பில் பலகட்ட பேச்சு நடத்தியும் ஊதியம் வழங்கப்படாததால், வரும் அக்.3-ஆம் தேதி முதல் தொடர் கடையடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.