மத்திய அரசின் புகையில்லா கிராமத் திட்டத்தின் கீழ் திருநள்ளாறு பகுதியினருக்கு இலவச எரிவாயு அடுப்பு மற்றும் உருளைகளை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வியாழக்கிழமை வழங்கினார்.
கிராம மக்களை புகை அடுப்பு பயன்பாட்டிலிருந்து மீட்கும் வகையில், புகையில்லா கிராமத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தி கீழ் எரிவாயு அடுப்பு வசதி இல்லாத ஏழை குடும்பத்தினருக்கு இலவசமாக எரிவாயு உருளை, அடுப்பு உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், கெயில் இந்தியா நிறுவனம் தமது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் 250 பயனாளிகளுக்கு அடுப்பு, எரிவாயு உருளைகளை வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக, 200 எரிவாயு இணைப்புகளை திருநள்ளாறு பகுதியில் பல்வேறு கிராம மக்களுக்கு அளித்தது. 500 இணைப்பு தரும் விதத்திலான இத்திட்டத்தில், எஞ்சிய 50 இணைப்புகளாக அடுப்பு, எரிவாயு நிரப்பப்பட்ட உருளை, ரெகுலேட்டர் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி அம்பகரத்தூர் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச எரிவாயு அடுப்பு மற்றும் உருளைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: கெயில் இந்தியா நிறுவனம் திருநள்ளாறு பகுதியில் பயனாளிகளைத் தேர்வு செய்து இலவச எரிவாயு உருளை, அடுப்புகளை வழங்கியது பாராட்டுக்குரியது. காரைக்காலில் இதுபோன்ற திட்டப் பயனை அடையும் விதத்தில் பலர் உள்ள நிலையில், அவர்களுக்கும் திட்ட உதவி கிடைப்பதற்கான நடவடிக்கையை கெயில் நிறுவனம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கெயில் பொது மேலாளர் (தமிழ்நாடு, புதுவை) எல். ஆறுமுகம், துணைப் பொது மேலாளர் டி.எஸ்.விஸ்வநாதன் (கட்டுமானம்) ஆகியோர் பேசினர். திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எம்.சிங்காரவேலு, சத்யா கேஸ் ஏஜென்சி மேலாளர் சின்னப்பன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் அறங்காவல் குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக கெயில் துணைப் பொதுமேலாளர் (நிதி) சி.விஸ்வநாதன் வரவேற்றார். நிறைவாக கெயில் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சி.சங்கர் நன்றி கூறினார்.