குப்பைகளை முறையாக கையாளாத குடியிருப்புவாசிகள், வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக, மக்களின் ஒத்துழைப்புடன் குப்பைகள் வகை பிரித்து வீடு வீடாக சேகரிக்கப்படுகிறது. எனினும், சிலர் குப்பைகளை சாலையில் கொட்டுவதும், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குப்பைகளை நெகிழி பைகளில் வைத்து வீசிவிட்டுச் செல்வதுமாக உள்ளனர்.
சிலரது இந்த செயல் மக்களின் அலட்சியத்தையும், பொது சுகாதாரத்துக்கு ஒத்துழைக்காததையும் காட்டுகிறது. காரைக்கால் மாவட்டத்தை தூய்மையாக வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்கு பிரதானமானது. மேலும், சில வர்த்தக நிறுவனத்தினரும், குப்பைகளை உரிய வழி வகையில் அகற்றி வெளியாக்காமலும், சுத்தத்துக்கும், சுகாதாரத்துக்கும் ஒத்துழைக்காமல் செயல்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் வகுத்தளித்துள்ள விதிகளின்படி குப்பைகளை கையாளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வணிகர்கள் அவ்வாறு நடந்துகொண்டால், வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.