இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டுவர தொடர் முயற்சி: தேசிய மீனவர் பேரவைத் தலைவர்

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 18 பேரை மீட்டுவர தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய மீனவர் பேரவைத் தலைவர் எம். இளங்கோ தெரிவித்தார். 


இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 18 பேரை மீட்டுவர தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய மீனவர் பேரவைத் தலைவர் எம். இளங்கோ தெரிவித்தார். 
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த அருணகிரி, அரசமணி, செல்வமணி ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகில், எம். அருணகிரி, ஜி. மோகன், ஜி. சேகர், ஜி. தமிழ்மணி, எஸ். முருகன், பி. கந்தன், எஸ். அரசமணி, பி. மனோகர், எஸ். சந்திரன்,  எஸ். கதிரேசன், என். சுபாஷ், எஸ். செல்வமணி, எஸ். தமிழ்மணி, எஸ். தங்கமணி, ஏ. மகேந்திரன், எம். வீரப்பன், எல். ரவிக்குமார், எஸ். ரத்தினம் ஆகிய 18 பேரும் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 4-ஆம் தேதி இரவு மீன்பிடிப்பில் இருந்தபோது, எல்லை தாண்டியதாக இவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி காரைக்கால் மீனவர்கள் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால், மீனவர்கள் விடுவிப்பு மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மீனவர் மீட்பு நடவடிக்கைத் தொடர்பாக தேசிய மீனவர் பேரவைத் தலைவர் எம். இளங்கோ புதன்கிழமை கூறியது: காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சிறையில் அடைத்ததோடு, அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்கள், இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தவில்லை. வழிதவறி சென்றவர்களாகவே இவர்கள் கருதப்படுகின்றனர். எனவே, மனிதாபிமான அடிப்படையில் இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியை தொடர்புகொண்டு வலியுறுத்தினோம். முதல்வரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொடர்புகொண்டு வலியுறுத்தினார். மாநில அரசு இந்த விவகாரத்தில் தொடர்பில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் காலமாக இருப்பதால் இதில் தாமதம் ஏற்படுகிறது. எனினும், புதுச்சேரி அரசையும், மத்திய அரசையும் தேசிய மீனவர் பேரவை தொடர்ந்து இந்த விவகாரத்தில் வலியுறுத்தி வருகிறது. விரைவாக மீனவர்கள் தாயகம் திரும்பத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்றார் இளங்கோ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com