கோடை கால விளையாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு
காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் அரசு விளையாட்டு அரங்கத்தில் கோடைகால விளையாட்டுப் பயிற்சியளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இறகுப் பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், பளு தூக்குதல், கபடி மற்றும் தடகள விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோர் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் அரசு விளையாட்டு அரங்கத்தில் காலை 6 முதல் 10 மணிக்குள் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சிக் கட்டணமாக இறகுப் பந்து ரூ.4 ஆயிரம், டேபிள் டென்னிஸ் ரூ.2 ஆயிரம், ஹாக்கி, கால்பந்து, தடகள விளையாட்டு, பளுதூக்குதல், கபடிக்கு தலா ரூ.500, கிரிக்கெட்டுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.