காரைக்காலில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் கடல் வழியாக கஞ்சா மற்றும் பிரவுன்சுகர் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்குமாறு காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் பிறப்பித்த அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் மாவட்டத்துக்கு உட்பட்ட கடலோர பகுதிகளில் கடலோர போலீஸார், சிறப்பு அதிரடிப்படை பிரிவு காவல் ஆய்வாளர் லெனின்பாரதி, உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையிலிருந்து கார் மூலம் 400 கிலோ கஞ்சா மற்றும் 60 கிலோ பிரவுன்சுகர் உள்ளிட்டவைகளை எடுத்துவந்து, காரைக்கால் மண்டபத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மீன்பிடி ஃபைபர் படகுகள் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இது குறித்த கோட்டுச்சேரி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.