அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் அக்கட்சியினர் கோயில்களில் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் தலைவருமான வி.ஆனந்தன் தலைமையில் கட்சியினர், கோயில்பத்து பகுதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, ரங்கசாமி நலனுக்கு பிரார்த்தனை செய்தனர். கோயில் வாயிலில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் செய்தனர்.
பேருந்து நிலைய வளாகத்தில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. காரைக்கால் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று மாணவர்களுக்கு காலை உணவும், நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்களை ஆனந்தன் வழங்கினார்.
காரைக்கால் பகுதியில் உள்ள சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பிரமுகர்கள் சுந்தர்ராஜன், பாரீஸ்ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்று கட்சித் தொண்டர்கள் பலர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கோயில்களில் பிரார்த்தனையும், இனிப்பு வழங்கலிலும் ஈடுபட்டனர்.