காரைக்கால் அருகேயுள்ள சிவலோகநாத சுவாமி கோயிலில் விதைத்தெளி உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருத்தெளிச்சேரி என்னும் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி கோயில் உள்ளது. மழையின்மையால் விளைநிலம் யாவும் வறண்டு இருந்ததாகவும், மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்த நிலையில், மழை பெய்யச் செய்து சிவபெருமான் உழவனாக மாறி விதைத் தெளித்து உழவுப் பணியில் ஈடுபட்டதாகவும், இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில், இக்கோயிலில் விதைத் தெளி உத்ஸவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் கோயில் நந்தவனம் அருகே எழுந்தருளினார். ஊர் மக்கள், கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் நந்தவனத்தில் நெல்மணிகளை தெளித்து சுவாமியை வழிபட்டனர். முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மழைப் பெய்து, விவசாயம் செழிக்கும் வழிபாடாக ஆடி மாதத்தில் தொடர்ந்து இக்கோயிலில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். விதைத் தெளிக்கும் உத்ஸவத்தைத் தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடைபெற்றது.