சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள முதல்வரைக் கண்டித்து, காரைக்காலில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி காரைக்கால் மாவட்டத் தலைவர் கே.எஸ். விஜயன் தலைமை வகித்தார். பாஜக மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் எஸ்.சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேரள மாநில அரசு, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் புனிதத்தை கெடுப்பதாகக் கூறியும், அனைத்து வயது பெண்களும் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளலாம் என்ற நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐயப்பப் பக்தர் செல்வராஜ், இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் பி. வெங்கடேசன், பொதுச் செயலாளர் சிவக்குமார், தர்மரக்ஷன சமிதி மண்டல அமைப்பாளர் ஜி. முரளி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்படன. இதில் இந்து முன்னணி, பாஜக மற்றும் ஐயப்பப் பக்தர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.