திருப்பட்டினத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருப்பட்டினத்திலிருந்து நாகூர் நோக்கி இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவரிடம் வாகனம் குறித்து ஆவணங்கள் கோரியபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லாதது தெரியவந்தது.
விசாரணையில் அவர், நாகப்பட்டின்தை சேர்ந்த ஹசன் சாகுல்ஹமீது (36) என்பதும், திருப்பட்டினம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வந்ததும் தெரியவந்தது. அதே வேளையில் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் திருப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தமது இருசக்கர வாகனம் காணாமல்போனது குறித்து புகார் தெரிவித்தார். திருடிய வாகனம் அப்துல்காதருக்குச் சொந்தமானது என்பதை போலீஸார் உறுதிப்படுத்திக்கொண்டனர். இதையடுத்து, இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து ஹசன் சாகுல்ஹமீதை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.