காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக நலன், மழை வளம் உள்ளிட்ட பிரார்த்தனையுடன் ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்பட்டுவருகிறது.
நிகழாண்டு 22-ஆம் ஆண்டாக சுந்தராம்பாள் சன்னிதியில் உள்ள யாக குண்டத்தில் ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதற்காக காலை மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜைகள் நடத்தப்பட்டன. ஏகாதச ருத்ர கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 11 சிவாச்சாரியார்கள் ருத்ர ஹோமம் நடத்தினர். அப்போது ஏராளமான பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய்,
பட்டுச் சேலை, பால், தயிர், பழங்கள், நெய் உள்ளிட்டவை யாக குண்டத்தில் போட்டு ஹோமத்தை நடத்தி மகா பூர்ணாஹுதி நடத்தினர். மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதருக்கு பகல் 12 மணியளவில் மகா ஸ்தபன அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் பிரதோஷ வழிபாடு, கைலாசநாதர் - சுந்தராம்பாளுக்கு திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தராம்பாள் உடனமர் கைலாசநாதர் அர்த்த ஜாம வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.