குளங்களை தூர்வார திமுக இளைஞரணி முடிவு
திமுக இளைஞரணி சார்பில் காரைக்கால் பகுதியில் குளம் தூர்வாருதல், மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம், இளைஞரணி செயல் திட்டங்கள் குறித்து இளைஞரணி அமைப்பாளர் ஐ. முகம்மது ரிஃபாஸ் விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், புதிதாக உறுப்பினர் சேர்த்தல், காரைக்கால் பகுதியில் இளைஞரணி தலைமையின் அறிவுறுத்தலின்படி குளங்கள் தூர்வாருதல், குளக்கரையிலும் பிற இடங்களிலும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை விரைவுபடுத்த திருநள்ளாறு தொகுதி பொறுப்பாளராக எம். பாலச்சந்தர், காரைக்கால் தெற்குத் தொகுதிக்கு கே.பிரகாஷ், திருப்பட்டினத்துக்கு பி. சரவணக்குமார், காரைக்கால் வடக்குத் தொகுதிக்கு என். விஜயபாஸ்கரன், நெடுங்காடு தொகுதிக்கு எஸ்.சூசைநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் அமுதா ஆர்.ஆறுமுகம் மற்றும் இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.