காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் 8-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக இணைத் தலைவர் என்.வி.சந்திரசேகர் தலைமை வகித்தார். இக்கல்லூரியில் பயின்ற 16 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், தலா 17 பேருக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 88 எம்.பி.பி.எஸ். மாணவர்களும், 36 முதுகலைக் கல்வி முடித்த மாணவ மாணவியர் மற்றும் 57 செவிலிய பட்டதாரிகளும் பட்டம் பெற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக பத்மஸ்ரீ, பி.சி.ராய் விருதுபெற்ற மருத்துவப் பேராசிரியர் சிவபாதம் விட்டல் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கிப் பேசுகையில், மருத்துவத் துறை என்பது மற்ற துறைகளைக் காட்டிலும் தனித்துவம் கொண்டதாகும். ஒவ்வொரு நாளும் மருத்துவத்தில், நோய் வேறுபடுகிறது, மருத்துவ பரிசோதனைக் கருவிகள் வேறுபடுகிறது, சிகிச்சை முறைகளில் மாற்றம் வருகிறது. உலக அளவில் பார்க்கும்போது, ஒவ்வொரு மணிக்கும் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே மருத்துவக் கல்வி முடித்துவிட்டோம் என இருந்துவிடாமல், மேலும் மருத்துவத்தில் அறிவை வளர்த்துக்கொள்ள எந்தெந்த வகையில் பணியாற்ற முடியுமோ அவ்வாறு மேற்கொள்ளவேண்டும்.
உலகளாவிய அளவில் வெளியிடப்படும் மருத்துவ இதழ்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிர்வாக அறங்காவலர் எஸ். அருணாதேவி சந்திரசேகர், பல்கலைக்கழக இயக்குநர் என்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கல்லூரி புலமுதல்வர் பேராசிரியர் மருத்துவர் அம்புஜம் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் விஜயகுமார் நாயர் மருத்துவ மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்தார். செவிலியர் கல்லூரி முதல்வர் கமலா, செவிலிய மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்தார். கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சையது மஹரூஃப் சாஹிப் நன்றி கூறினார். பல்கலைக்கழக இணைப் பதிவாளர் பொன்னியின் செல்வன், காரைக்கால் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த பைரவன், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.