வாக்குப் பதிவின்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக 280 தன்னார்வலர்கள் மற்றும் 10 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் துறை தெரிவித்ததது.
இதுகுறித்து, காரைக்கால் தேர்தல் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்காலில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாவட்டத்தில் 164 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கச் செல்லும்போது அவர்களுக்கு உதவி செய்வதற்காக 280 தன்னார்வலர்ள் (என்.எஸ்.எஸ்) மற்றும் 10 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பணி செய்ய தயார் நிலையில் இருப்பார்கள். இவர்கள் செல்வதற்காக கார்களும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு காரிலும் ஒரு அதிகாரி, 2 பெண் தன்னார்வலர்கள் இருப்பார்கள். இதேபோல், ஒவ்வொரு வாகனத்திலும் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு வசதியாக சக்கர நாற்காலி இருக்கும். வாக்குப் பதிவு நிறைவடையும் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்களது உதவி தேவைப்படுவோர் லட்சுமணபதி என்பவரை 9486537933 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.